×

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல்: மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவள்ளூர்: சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ராதேவி (46), தஸ்தகீர் (39). இவர்கள் இருவரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், சித்ரா தேவி மற்றும் தஸ்தகீரிடம் 18 வயதிற்கு கீழுள்ள சிறுமியை பாலியலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து திருவொற்றியூரில் தனியாக வீடு ஒன்று வடகைக்கு எடுத்து, 18 வயதிற்கு உட்பட்ட 2 சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பாலியல் தொழில் குறித்து தகவல் கிடைத்த சிபிசிஐடி போலீசார், சித்ராதேவி, தஸ்தகீர் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021-ல் உடல்நலக்குறைவு காரணமாக திருநாவுக்கரசு உயிரிழந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கே.அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் தொழில் நடத்துவதற்கு ஒரு வீட்டை பயன்படுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் மூன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் சித்ராதேவி மற்றும் தஸ்தகீர் ஆகிய இருவருக்கும் தலா ரூ.7 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 20 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை என்றும் இவை அனைத்தையும் ஏக காலத்தில் (10 ஆண்டுகளில்) அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின் இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல்: மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mahila ,Tiruvallur ,Chitradevi ,Dastagir ,Manali ,Chennai ,Dinakaran ,
× RELATED மாமியாரை கூலிப்படை ஏவி கொன்ற...